Thursday, 13 June 2013

மலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில் நிலைத்து விடுகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம் எனக்கு கிடைத்த இப்பாடலானது தொண்டைக் குழியில் தங்கிஇடையிடையே வாய்வழியே எட்டிப் பார்க்கத் தவறவில்லை.
அப்பாடலுக்கான இசையை துஸ்யந்தன் செல்வராசா என்ற மலையகத்தைச் சேர்ந்தவர் இசையமைத்திருக்கிறார்.
ரஸ்லான் பாடலை பாடியிருக்க,
வயலின் சுறங்க ராஜபக்ச,
வீணை சரவண சுந்தரி முருகன் (கொழும்பு விஞ்ஞான பீட மாணவி)
பியனோ வி.செந்தூரன்
போன்றவரின் கூட்டணியுடன் கிட்டாரை துஸ்யந்தனே மீட்டியிருக்கிறார்.
இவர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவனாக இருக்கிறார்.
.இதில் ரஸ்லான் சக்தி சுப்பர் ஸ்டார்களில் ஒருவராவார்.

மிகவும் நேர்த்தியான இசைக் கோப்புடன் உருவாகியுள்ள இப்பாடலானது மலையக மண்ணின் ஒரு தடமாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.

இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்காக இசையமைத்த தமிழ் வாழ்த்துப்பாடல் கீழே இணைத்துள்ளேன்.. அப்படியே லயிக்க வைக்கும் ஸ்வரங்கள் இவர் விரல்களுக்கும் ஒளிந்திருப்பதை உணர அதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

Wednesday, 12 June 2013

என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற் குறிப்பு- இச்சம்பவம் ஆனது கடந்த சில நாட்களின் முன்னர் இடம்பெற்ற இயற்கைக் குழப்பத்தின் போது நடந்தது. அதன் வீடியோவை உடனே ஏற்ற முடிந்தாலும் பதிவெழுத நேரமின்மையால் காலதாமதமாகிவிட்டது.

யாழில் அமைந்துள்ள முக்கிய பெருந்தெருக்களில் யாழ் பருத்தித்துறை வீதிமுக்கியமானதும் அதிக வருவாய் தரும் விதியுமாகும் (பிரயாணிகள் மூலம்)
இதன் சீர் திருத்தப்பணிகள் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற போதும் இன்னும் முடிவதாகத் தெரியவில்லை.

இதே பாணியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த யாழ் பலாலி வீதியானது ஜனாதிபதியின் வருகையை அடுத்து ஒரே இரவில் முழுமையடையச் செய்யப்பட்டது பலர் அறிந்ததே. ஆனால் இதே வீதியில் பல குன்றும் குழிகளும் மாதக்கணக்காக இருப்பது மட்டுமல்லாமல் வீதி புனரமைப்பாளரால் பல மாதக்கணக்காக பாரிய குழிகள் தோண்டி விடப்பட்டுள்ளது.

இதில் பலவற்றுக்கு எச்சரிக்கை சமிஞ்ஞை கூட இல்லாத நிலையில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக காணப்படுவது வல்லைப் பாலத்திற்கு இருமருங்கிலும் இருக்கும் பாரிய பள்ளமாகும். இதன் ஒரு பகுதி சாதாரண பள்ளமாக இருந்தாலும் மறுபகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த 4 மாதங்களாக இருக்கும் இக் குழி ஏன் இருக்கின்றது என யாருக்குமே தெரியாது.

அதுமட்டுமல்லாமல் இதனூடாக நிச்சயம் யாழின் அனைத்து உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளும் ஏசி வாகனத்தில் ஊர்ந்து கடந்து சென்ற அனுபவம் இருக்கும் என்பது மிக மிக உறுதியான விடயமாகும்.

மேலும் இங்கு கடந்த சில தினங்களாக தலைகீழாக ஒரு எச்சரிக்கை பதாதை தொங்க விடப்பட்டிருந்தது ஆனால் இப்பதாதையானது யாழ் நோக்கிச் செல்வோருக்கு மட்டுமே தெரியும் யாழிலிருந்து பருத்துறை நோக்கி வருபவருக்கு இப்படி ஒரு கிடங்கிருப்பது தெரியாது. அதுமட்டுமல்லாமல் இப்போது அந்த பதாதையும் அங்கே இல்லை.
இப்போது பலத்த காற்று வீச ஆரம்பித்துள்ள நேரத்தில் சாதாரணமாகவே அவ் வெளியில் பல உந்துருளிப் பிரயாணிகள் கடலுக்குள் விழுந்த சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளது.
விபத்துக்கான காரணங்களை எங்கள் வசம் வைத்துக் கொண்டு விபத்து சம்பந்தமான போதனைகளைப் போதித்து என்ன ஆகப் போகிறது.
சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்களா?

சரி தலைப்பிற்கு வருவோம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் அப்பாலத்தில் நடந்த சம்பவம் இது.
நான் உடுப்பிட்டியில் இருந்து யாழ்  நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் அக்கிடங்கை கடந்து ஏறுகையில் எதிரே ஒரு ஆட்டோவும் பிக்அப் ரக வாகனமும் வேகமாக வந்து கொண்டிருந்தன.
சடுதியாகக் கிடங்கைக் கண்ட ஆட்டோக்காரர் பிறேக்கை (வேக நிறுத்தியை) பிடித்தார் அவர் பின்னால் வந்த பிக்கப் வேகமாக வந்ததால் அதன் ஓட்டுனரும் பிறேக்கைப் பிடித்தார். இரும்புப் பாலமாகையால் பிடிமானமில்லாத ரயர்கள் சறுக்க பிக்கப் திரும்பிக் குறுக்காக நின்றது.

என்னுடைய உந்துருளியாகையால் என்னால் பிறேக் பிடிக்க முடியாது பிடித்தால் சறுக்கி விழுத்தி விடும் அளவுக்கு மழை.
நான் சுதாகரிப்பதற்கு முன்னரே பிக் அப்பிற்கும் பாலத்திற்கும் இடைப்பட்டிருந்த 3 அடி (கிட்டத்தட்ட) இடைவெளிக்குள்ளால் புகுந்த உந்துருளி மறுபக்கம் கடந்து விட்டது. மறு நாள் போய் தான் இந்த வீடியோவை எடுத்ததுடன் மேலே குறிப்பிட்டிருந்த ஆக்கத்தையும் (சுய புராணத்திற்கு மேல் உள்ளது) ஒரு யாழ்ப்பாணத்து தினசரிப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை கண்டு கொண்டதாகத் தெரியாததால் பத்திரிகைக்கும் எனக்கும் உள்ள விதிமுறையை மீறி முதலே பதிவிட்டுக் கொள்கிறேன்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

Monday, 3 June 2013

சிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை

முற்குறிப்பு- இது ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைக்குட்பட்ட பார்வையே...

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

ஒரு திரைப்படத்தின் (இந்திய) முக்கிய அங்கமாகக் கருதப்படுபவற்றில் பாடல்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த வகையில் மாற்றானில் அடிவாங்கிய சூர்யா மாற்றம் ஒன்றுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் சிங்கம் 2 க்கான பாடல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆர்வத்தோடு காத்திருந்து கேட்டதற்கான திருப்தியை ஒரு பாடல் கூட கொடுக்கவில்லை. அத்தனை பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பின்னணி அடி உதையுடனேயே ஒலிக்கிறது.

சென்ற முறை அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் கதையின் கனத்தை அனுஷ்காவின் காதலும் தூக்கி நிறுத்தி வைத்திருந்தது. அதன் காரணமாகவே பல பெண்களும் துணிந்து அப்படத்தை வரவேற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் 3 காதல் ததும்பும் பாடலுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அந்தளவு காதல் இருக்குமா தெரியவில்லை (மனைவியிடமும் காதல் காட்டலாம் தானே)
காதல் வந்தாலே – (விவேகா)
என் இதயம் – (நா முத்துகுமார்)
Stole My Heart – (விவேகா)
மற்றைய இரு பாடல்களில் ஒன்று தீம் பாடலாக போக மற்றைய விவேகாவின் ஒரு பாடல் ஹீரோயிசப்படலாகிப் போனது.

ஆனால் இம்முறை புரியவில்லை என்ற சுவேதா மேனனின் பாடல் மட்டுமே காதல் ததும்ப ஒலிக்கிறது. அத்துடன் பைலா இசையை நினைவூட்டும் வகையில் கண்ணுக்குள்ளே என்ற பாடல் ஜாவிட் அலி மற்றும் பிரியா ஹிமேஸ் குரலில் ஒலிக்கிறது நிச்சயம் இருபாடலும் நாயகி கர்ப்பாமாக உள்ள நேரத்தில் கொடுப்பாரென்றால் கருக்கலைந்து விடும் காரணம் அந்தளவு துள்ளல் இசை.

சென்ற முறை காதல் வந்தாலே பாடல் மூலம் கவர்ந்த பாபா சேகலை இம்முறை ஒரு ஹீரோயிச பாடலுக்கு பயன்படுத்தி தேவி சிறி பிரசாத்தும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்.
காட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம் என்ற பாடலை கர்ஜனையோடு சங்கர்மகாதேவன் படித்திருக்க அந்தப்பக்கமே தன் குரலை தெளிக்காமல் ஒளிந்திருக்கிறார் நம்ம DSP.

நம்ம DSP (தேவிசிறி பிரசாத்) இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசை..
பல அருமையான நல்ல பாடல்களைத் தந்த நீங்கள் உங்கள் இசையை 200 அல்லது 300 வருடம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கப் போகிறீர்களா? காரணம் உலகமெல்லாம் பரந்திருக்கும் இசைக்கு பஞ்சம் வந்துவிடும் என நினைத்தோ தெரியவில்லை உங்கள் இசையை கொஞ்சம் கொஞ்சமாகவே பயன்படுத்துகிறீர்கள்.
ஏற்கனவே மாயாவி, மழை போன்ற படப்பாடலுக்குள் கஞ்சத்தனம் காட்டி இசையை கோர்த்து விட்டதை மறக்க முடியவில்லை. அதே போலவே இம்முறையும் பல இடங்களில் இசைச் சிக்கனத்தைக் கடைப்பிடித்திருக்கிறீர்கள். 
எதுவோ புரியவில்லை பாடல் கூட அந்தளவுக்கு மோசமில்லை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. மிகுதி காட்சிகளே தீர்மானிக்கும்..

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

Saturday, 25 May 2013

சிறு நீரக மாற்றத்துக்காக மரணத்தோடு தவிக்கும் பெண்ணை காப்பாற்ற உதவுங்கள் (ஒலிக் கோப்பு இணைப்பு)

எனது அரவணைப்போம் செயற்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இந் நபர் பற்றிய விபரங்கள் படத்தில் இணைக்கப்பட்டுள்ளது படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் பெரிதாக்கிப் பார்வையிடலாம்.

இவர்கள் வன்னியின் இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவரது குடும்ப விபரம், வாழும் சூழல், பணம், தொழில் விபரம் பற்றி ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.


உதவ மனமுள்ளவர்கள் உங்களால் முடிந்த 100 ரூபாயைக் கொடுத்தால் கூட இப்பணம் இலகுவாக சேகரிக்கப்பட்டுவிடும். சிறு துளி பெரு வெள்ளம்

இந்த உலகத்தில் ஒவ்வொருத்தனும் மாற்றம் ஒன்றை விரும்பினால் நடைமுறைப்படுத்துவது பெரிய சிரமமான விடயமல்ல ஒரு கணம் சிந்தித்து முடிவெடுப்போம்.

உங்களால் முடியாவிட்டாலும் யாரோ ஒரு உதவ மனமுள்ளவர் உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கக் கூடும். இப்பதிவை பேஸ்புக்கிலோ அல்லது  சமூக வலைத்தளங்களிலோ பகிர்ந்து இவருக்கு உதவுங்கள்
என் தனிப்பட்ட செயற்பாட்டில் முன்னெடுத்து வரும் அரவணைப்போம் திட்டத்தின் செயற்பாடுகளை அறிய இங்கே செல்லவும்.

Friday, 24 May 2013

எம்மவர் பாடல் வளர்ச்சிக்கு உதாரணமாய் அமைந்த அருமையான அம்மா பாடல்

பாடல் என்பது மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தாலும் எல்லா வகைப் பாடல்களையும் எல்லா நேரத்திலும் கேட்க முடிவதில்லை. ஆனால் அதற்கு விதிவிலக்காக அமைந்த பாடல்களும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட பாடல்களில் தாயிற்காக அமைந்த பாடல் மிக முக்கியமாகும்.
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த அம்மா பாடல் ஒவ்வொரு தாயின் மகவையும் கட்டிப் போடும் என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லை.
பாடல் தயாரிப்பளரான ஐஸ்வர்யன் எண்டர்ரெயின்மெண்டைச் சேர்ந்த உமாமகேசின் சிரத்தையால் இப்பாடல் தென் இந்தியப் பாடகர் மதுபால கிருஷ்ணனின் மதுரக் குரலில் ஒலிக்கிறது. இப்பாடலை யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்திருப்பதும் இன்னும் சிறப்பைக் கூட்டும் விடயமாகும். அவருடன் சேர்ந்து றொசிற்றாவும் பாடியிருக்க பின்னணி இசையை ஈழத்து முன்னோடி இசைக் குழுவான அருணா இசைக்குழு ஸ்தாபகரின் மகனான அருணா கேதிஸ் வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பிரபலமான அம்மா பாடல் ஒன்றின் லயத்துடன் பாடல் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் எள்ளளவு கூட அலுக்க வாய்ப்பில்லை.
இது தான் பாடல் வரிகள்...

ஆரிராரோ பாட்டுச் சத்தம் கேட்குது
அம்மாவின் ஞாபகங்கள் தாலாட்டுது
ஆராரோ பாடி என்னை வளர்த்தாய் என் தாயே
ஆனாலும் நம் உறவை பிரிக்க முடியாதே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

ஈரைந்து மாதங்கள் கருவினில் சுமந்தாயே
ஈரேழு ஜென்மத்திலும் தாயாய் வரவேணும்
ஆலயங்கள் செல்வதில்லை நான் தாயே
தெய்வமாய் இருக்கின்றாய் என் தாயே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு
கானகத்து பூங்குயிலே கண்ணுறங்கு
கானகத்து வெண்ணிலவே கண்ணுறங்கு
அழுகின்ற என் மகனே நீயுறங்கு

தாய் மடி தேடி வந்தேன் உன் பிள்ளை நான் தானே
தாய் புகழ் பாடி வந்தேன் கவிப்பிள்ளை நான் தானே
அம்மாவின் அன்பாலே ஆனந்தம் காண்பேனே
அப்பாவின் ஆசியுடன் அகிலத்தை ஆழ்வேனே
உதிரத்தை ஊட்டி என்னை வளர்த்ததாய் என் தாயே
(ஆரிராரோ)

இந்த அருமையும் ஆழம் நிறைந்ததுமான வரிகளை கமலநாதன் மற்றும் றஜித் வரைந்திருக்க கிருத்திகன் கமராவால் வர்ணம் தீட்டியிருக்கிறார்.
இப்பாடலை சயன் இயக்க நடிகர்களாக கவிமாறன் மற்றும் சுகந்தினி ஆகியோர்  நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பை டனா செய்திருக்கிறார்.
எம்மவர் முயற்சிக்கு சான்று பயற்கும் இப்படியான படைப்புகளை மென் மேலும் வாழ்த்துக்களுடன் எதிர் பார்க்கிறோம்

அந்த அழகிய பாடலை ரசித்துப் பாருங்கள்

Tuesday, 21 May 2013

உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நாளுக்கு நாள் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை ஒவ்வொரு பரிமாணத்திற்கும் சடுதியாக இட்டுச் செல்கிறது.
ஸ்மாட் போன் பாவனையாளர்கள் தங்களிடையேயான இலவச தொடர்பாடலுக்கு பாவித்து வந்த viber என்ற அப்ளிகேசனானது புதிய மாற்றத்துடன் பலரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த அப்ளிகேசன் ஆனது ஏற்கனவே துல்லியம், குறைந்தளவு தரவுச் செலவீடு, போனுக்கு வேலைப்பளுவைக் கொடுக்காத மென் பொருள் என பல விடயங்களால் பலரை கவர்ந்திருந்த ஒரு அப்ளிகேசனாகும்.

இதில் குறையென்று பெரிதளவாக சொல்ல முடியாவிட்டாலும் புதிய பதிப்பு திறப்பதற்காக எடுக்கும் நேரம் அதிகம் அதோ போல எதிர் முனையில் உள்ளவர் கைப்பேசி அணைந்திருந்தாலும் றிங் பண்ணுதல் போன்ற குறைகள் இருக்கவே செய்தது.

ஆனால் இத்தனைக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்க முன்னர் இந்த அப்ளிகேசன் ஆனது கணணிகளுக்கு ஏற்றது போலவும் வெளியிடப்பட்டுள்ளது வெகு சிறப்பாகும். இதன் மூலம் கைப்பேசியில் இருந்தபடி கணிணியில் உள்ள ஒருவருடன் தகவல் பறிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இவை ஏற்கனவே ஸ்கைப் போன்ற மென் பொருள்களின் மூலம் கிடைத்தாலும் தரவுச் சிக்கன பாவனையாளருக்கு இது பெரும் சாதகமான ஒரு விடயமாகும்.

ஆனால் இக்கணக்குத் திறப்பதற்கு ஏற்கனவே ஒரு ஸ்மாட் போனில் viber கணக்கு திறந்திருக்க வேண்டும். அந்த இலக்கத்தைக் கொண்டு தான் ஆரம்பிக்க முடியும் அதே போல ஒருவர் அழைப்பெடுத்தால் இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் றிங் பண்ணுகின்றது.

http://www.viber.com/ இந்த இணையத்தளம் சென்றால் அங்கே தரவிறக்குவதற்கான நேரடித் தொடுப்பு கொடுத்திருக்கிறார்கள் இலகுவாக இறக்கி நிறுவிக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு சில நாளில் இன்னும் இம் மென் பொருள் மேம்படுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

Saturday, 18 May 2013

உணர்வு பெற்ற இந்நாளில் உறுதி கொள்ள சில வரிகள்

உறவுகள் தொலைத்தோம்
உணர்வுகள் வளர்த்தோம்
ஆண்டாண்டு தோறும்
அடிமை அடிமை இல்லையென
உரக்க ஊர்முழக்கி
வீரப்பட்டம் பெறுகிறோம்.

இதுவரை எது செய்தோம்
உணர்வினில் தவம் செய்தோம்
இனிவரை எது செய்வோம்
சிதைவழிந்த அஸ்திவாரம் செதுக்கி
சுவர்களை சீரக்கி முகடெழுப்பிய பின்
கொடிக் கம்பங்களை நடுவோம்

மீள முடியாதவர்
வரலாறு தந்து போய் விட்டார்
மீண்டவர் வரலாறு சொல்ல வாழ்கின்றார்
அடுத்த தலை முறை
எதற்காக வாழப் போகிறது

மடியில் கனமிருந்தவர்
கடல் தூர பறந்து விட்டார்
காலிற்கு செருப்பற்றவன்
பற்றை கடக்க வழியின்றி அழுகிறான்

ஒரு முறை நினைப்போம்
உறவினை வளர்ப்போம்
உணர்வுகள் சிரஞ்சீவியாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

இன்றைய நாள் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழன் வாழ்விலும் உருக்குலைந்த நாளாகும். மரணத்தைக் கடந்தவரோ மரணத்தை தேடி அடைய முடியாமல் வாழ்கின்றார். அவரையும் ஒருகணம் எம் உணர்வால் அரவணைப்போமா?

இன்றை இந் நாளில் சகோதரன் மதீசனின் இசை மற்றும் வரி உருவாக்கத்தில் உருவான இப்பாடல் நல்ல ஒரு உதாரணமான பாடலாகும். அதிலும் இந்த இடம் என்னை ஒரு தடவை நிற்க வைத்து விட்டது

ஃஃஃஃகடவுளுக்கு பணம் இறைக்கும் கொடையாளரே இவனுக்கும் உதவுங்கள் அருளாகுமேஃஃஃஃ


சிறீசாந்தின் சூதாட்ட வண்டவாளம் படங்களின் வாயிலாக





Tuesday, 14 May 2013

புலம்பெயர் தேசத்தில் கலக்கும் ஈழத் தமிழர் சாதனைகள் பாகம்-1

எந்த நாடு போனாலும் இந்தக் கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும் தான் நாடு மாறுது என்ற வரி என்மனவானில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது நினைவிருக்கும். இவ்வரி ஒரு நாடோடிக்கூட்டத்தின் வறுமையை சிததரிப்பதற்காக குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமிழனைப பொறுத்தவரை இவ்வரி மாறிய வருகிறது. எந்த நாடு போனாலும் அவனுக்கென்று தனி முத்திரையை எதோ ஒரு வகையில் பதித்திருப்பான்.

அந்த வகையில் இன்று அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் கனடா மார்க்கம் நகரசபைஅங்கத்தவராக இருக்கும் திரு லோகன் கணபதிப்பிள்ளையாவார். யாழின் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த போதும் நாடடின் சூழல் இவரை கொண்டு சேர்த்த எல்லை தான் பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் கனடிய தேசமாகும்.

ஆனால் ஒரு நகரசபையில் இருக்கும் மக்களின் 90 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஒரு ஈழத் தமிழன் அங்கத்தவராக வருவதென்பது எல்லோருக்கும் பெருமையான விடயம் ஒன்று தானே.
அந்நகரசபையின் ஒரே ஒரு தமிழ் பேசும் அங்கத்தவராக இருக்கும் இவர் செய்தது என்ன?
அந்நகரசபையின் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” “vanni street in markham canada”என பெயர் சூட்டுவோம் என இவர் முன்மொழிந்து அதை நடைமுறைப்படுத்தி திறக்கவும் உள்ளார்.

இதே நகரசபை தான் தமிழரின் விழா மாதமான தைத்திருநாள் மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக மாற்றி அதை விழாவாகவும் எடுத்து எமது கலை பண்பாட்டை கட்டிக் காக்க உதவி வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

பல நல்ல செயல்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது வழியில் பின்பற்றி எமது மொழி கலை பண்பாட்டுக்கு நாமும் உதவுவோம். அவருக்கு என் சார்பான வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
(ஏனையவர்கள் சாதனைகள் பற்றிய பதிவு தொடரும்)

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

Saturday, 11 May 2013

எனக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் தந்த யாழ்ப்பாண வெளியீடான ”விட்டில்கள்” குறும்படம்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?


வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் விபத்துக்கள் போலவே அமைந்து விடுகிறது. எமக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாவிடினும் சில விடயங்களில் எமக்கிருக்கும் ஆர்வம் என்றும் குன்றாமல் இருக்கும்.

அந்த வகையில் எனக்குத் தொற்றிக் கொண்ட ஆர்வத்தில் ஒன்று தான் இந்த குறும்படப் பைத்தியம் ஆனால் எவையும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் செய்ய வேண்டியவையே... அந்தக் காலம் கடந்தால் மிகவும் சிரமமானதே..

வீடியோ தொகுப்பாளரான நண்பன் வேல் முருகனிடம் எப்போதோ காணும் போது சொல்லியிருந்தேன். ”எங்காவது படப்பிடிப்பு நடந்தால் சொல்லுங்கள் நேரம் கிடைத்தால் பார்க்க வருகிறேன் என்று“ நான் அதை மறந்தாலும் அவர் மறக்க வில்லை.
சில நாட்களின் முன்னர் நவிண்டிலில் ஒரு படம் செய்யுறம் நேரம் கிடைத்தால் வந்திட்டுப் போங்கோ என்றார் சரி பிற்பகல் தானே போவோம் என போனால் நடந்த இடம் எனக்கு நினைவு தெரிவதற்கு முன்னமே எம் குடும்ப நண்பராக இரந்த செல்லாஅண்ணாவின் ஸ்ருடியோ அங்கே பார்த்தால் என்னுடன் முன்பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்த பிரதீப் அவனுடன் ஏற்கனவே பழகிய நண்பனான தர்சன் என ஒரு பட்டாளம் நிற்க படத்தின் இயக்குனர் யாரெனப் பார்த்தால் அவரும் பழைய நண்பராகவே இருந்தார்.
செல்லா அண்ணா, தர்சன், பிரதீப், நான்

அப்புறம் என்ன மச்சான் நீயும் ஒரு சீனில் நடிக்கிறாய் என்றால் எனக்கு எந்த ஆயத்தமும் இல்லை. சரி என்ன தெரியாத ஒன்றா செய்திட்டுப் போவோமென இறங்கியது தான் இந்த விட்டில்கள் குறும்படம்.
அடுத்து காட்சிகள் முடிந்து டப்பிங்கிற்கு போன போது தான் அதன் சாவால் தன்மை புரிந்தது. ஆனால் இயக்குனர் ஜெயதீபன் எனக்கு தந்த வசன சுதந்திரம் என் சிரமத்தைக் குறைந்தது. ஏன் என்றால் நான் பேசிய வசனங்கள் எனக்கு காட்சி விளங்கப்படுத்திய பின்னர் எனது சொன்ன மொழியில் பேசியவையே.. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்றையவை அனைத்திற்கும் ஒரு சந்தர்ப்பமே எடுத்துக் கொண்டது வியப்பாகவே இருந்தது அத்தனைக்கு காரணம் அனுபவசாலியான வீடியொ தொகுப்பாளர் செல்வம் அண்ணை தான்.

இப்படத்தில் 1993 -1994 ல் சின்ன விழிகள் போன்ற ஈழப்படங்களில் நாயகனாக கலக்கிய செல்வம் அண்ணையுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. அத்துடன் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆசிரியரான பரணிதரன் சேரும் எம்மோடு இருந்தது சந்தோசமாக இருந்தது.

டப்பிங்கில் மிக அதிக கவனம் செலுத்திக் கொண்ட விடயம் என்னவென்றால் எமது பிராந்திய மொழிவழக்கைத் தான் காரணம் பல தென்னிந்திய திரைப்படங்களும் நடிகர்களும் பேச முனைந்து தோற்றுப் போன விடயங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்றாகும். பாயும்புலி அனோரமா தொடக்கம் தெனாலி கமல், நந்தா லைலா, ராமேஸ்வரம் ஜீவா மணிவண்ணன் என ஒரு பெரும் பட்டாளமே அந்த வரிசையில் நிற்கிறது.
 படத்தில் கதை என்று சொல்லப் போனால் நீங்கள் அறியாத ஒன்றல்ல ஆனால் 4 நாட்களுக்குள் வடமாகாண குறும்படங்களுக்கான போட்டிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்பட்டதால் ஒரு சில வழுக்களை நாமும் அறிந்திருந்தாலும் மீள் திருத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் விட்டது.

தங்களது மனம் திறந்த முகஸ்துதியற்ற விமர்சனங்களை எதிர்பாரத்த நிற்கிறோம் ஏனென்றால் அடுத்தடுத்த படைப்புக்களில் எம்மைச் சீர்ப்படுத்த இவை தான் ஏதுவாக அமையும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


இங்குள்ள ஆக்கங்கள் அனைத்தும் எனது சொந்தப் பதிவுகளே. பயன்படுத்துவோர் அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும்